Sunday, March 1, 2015

ஒபாமாவின் மதச்சுதந்திரம் தொடர்பான பேச்சுக்கு காரணம்-2



இந்தியா விதிக்கும் சில நிபந்தனைகளில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு யார் வழங்குவது.ஏனென்றால் போபால் விஷவாயு கசிவில் அதன் அப்போதைய நிர்வாகி வாரன் ஆண்டர்சன் சில அரசியல் தலைவர்கள் உதவியுடன் இந்தியாவிலிருந்து தப்பியது இந்திய நாட்டு மக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனால் விபத்து மற்றும் இழப்பீடு விவகாரங்களில் இந்தியா மிக கவனமாகக் கையாள வேண்டியுள்ளது.ஆனால் இவ்விவகாரத்தில் அமெரிக்காவும் முரண்டு பிடிப்பதால் அணு ஒப்பந்தம் கால தாமதமாகிக் கொண்டே வந்தது.இதற்கிடையில் ரஷ்யா,பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு அணு ஆராய்ச்சியில் தரும் ஒத்துழைப்பை மேலும் பல மடங்கு அதிகரித்ததுடன் முதலீடுகளையும் அதிகரித்துள்ளனர்.இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.ஏனென்றால் தான் கணக்கு போட்டு வைத்துள்ள 100 பில்லியன் டாலர் வர்த்தகத்திற்கு பங்கு வந்துவிடுமோ என்று அமெரிக்கா அஞ்சுகிறது.கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்தார்.இந்தியாவுடன் 10-க்கும் மேற்பட்ட அணு உலைகள் கட்ட ஒப்பந்தம் மேற்கொண்டார்.இந்த ஒப்பந்தத்தினால் அமெரிக்கா தன்னுடைய அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.இதனால்தான் ஒபாமா இந்திய பயணத்திற்கு உடனடியாக ஒத்துக் கொண்டார்.

ஒபாமாவின் மறைமுக நெருக்கடி:


இந்திய பயணத்தில் அணு ஒப்பந்தம் முடிவு எட்ட படாததால் மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் அடைந்த ஒபாமா.இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தாவது நிறைவேற்ற வேண்டுமென தீர்மானித்தார்.தற்போதைய இந்திய அரசிற்கு மத அடிப்படையிலான நெருக்கடி கொடுத்தால் மட்டுமே விரைந்து முடிக்க முடியுமென்று ஒபாமா இந்தியப் பயணத்தின்போது தனது பேச்சில் மத அடிப்படையில் பிளவுகள் ஏற்படாதவரை இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று கூறினார்.உடனே இந்தியாவிலுள்ள அனைத்து எதிர்கட்சிகளும் மற்ற நாட்டின் தலைவர் வந்து நமது நாட்டின் மத ஒற்றுமையை பற்றி பேசும் அளவிற்கு நமது நாட்டின் நிலைமை உள்ளது என்று பெரிய பிரச்சினை உண்டு பண்ணினர்.இதுபோதாதென்று அமெரிக்க செனட் சபையில் குடியரசு கட்சியைச் சார்ந்த எம்.பி ஜோ.பிட்ஸ் ஆற்றிய உரையில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க பன்மைத்துவம் தற்போது சகிப்புத்தன்மையின்மை,பிரிவினை,பெரும்பான்மைத்துவத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.மேலும் சிறுபான்மையினத்தவரின் மீது தாக்குதல் அதிகரித்து இருப்பதாக கூறினார்.இதன் பின்னர் சில நாட்கள் கழித்து ஒபாமா கூறுகையில் தற்போதைய இந்தியாவில் சமய சகிப்புத்தன்மையை பார்த்தால் காந்தி கூட அதிர்ச்சியடைந்து இருப்பார் என்று கூறினார்.இவ்வாறாக தொடர்ச்சியாக மத அடிப்படையிலான விஷயத்தை திரும்பத்திரும்ப கூறி வந்ததை புரிந்து கொண்ட இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் அரசாங்கம் வேறு ஒரு காரணத்திற்காக தொடர்ச்சியாக நெருக்கடி சந்தித்து வருகிறது என்று அவ்விஷயத்தை விமர்சிப்பதை நிறுத்திவிட்டனர்.


எதிர்காலத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான தடை:


முதலாவது அணுசக்தி விவகாரம் என்றாலும்,இரண்டாவது காரணம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான எதிர்கால நடவடிக்கை.ஏனென்றால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிருந்து நிதி உதவியைப் பெற்றுக் கொண்டு மறைமுகமாக நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதாகும்.அவர்களுக்கு அதிக நிதி உதவியை அளிப்பது அமெரிக்கா,பிரான்ஸ்.அமெரிக்கா எப்போதுமே ஒரு கையை குலுக்கிக் கொண்டு மறுகையில் கீழே தள்ளி விடுவது கை வந்த கலை.தனக்கு சாதகமான அரசிற்கு எதிரான போராட்டங்களை நடத்த இத்தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.அமெரிக்காவிடம் நிதி உதவியை பெற்று கேரள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தை திறக்க விடாமல் பல போராட்டங்களை நடத்தியது நாடறிந்ததே.கூடங்குளம் விவகாரத்தில் விழித்துக் கொண்ட மத்திய அரசு இதேபோன்று பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாதென்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கணக்குகளை ஆராய ஆரம்பித்ததுடன் மறைமுகமாக அவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்த மத்திய அரசு கிட்டத்தட்ட 180க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி தடை செய்ய ஆய்வு செய்து வருகிறது.இவ்விஷயம் அமெரிக்காவுக்கு எட்ட அதன் பின்னரே எம்.பி ஜோ.பிட்ஸ்,அதிபர் ஒபாமா ஆகியோர் மறைமுக எச்சரிக்கையாக மத விவகாரங்களைப் பற்றி பேசினர்.
கிடைக்கும்போதெல்லாம் மத விவகாரம்,மத்திய அரசை ஐ.நா சபையின் மூலம் விமர்சிப்பது என்று அமெரிக்கா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டே வருகிறது.இத்தகைய விவகாரங்களை திறம்பட சமாளித்தால் மட்டுமே எதிர்காலத்தில் வல்லரசுக் கனவிற்கு வலுவான அடித்தளம் அமைக்க முடியும்.

ஒபாமாவின் மதச்சுதந்திரம் தொடர்பான பேச்சுக்கு காரணம்-1

கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி மூன்று நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா குடியரசு தினச் சிறப்பு விருந்தினராக இந்தியா வந்தார்.குடியரசு தின இராணுவ அணிவகுப்பு மற்றும் கலாச்சார ஊர்திகளின் அணிவகுப்பின் விழாவில் கலந்து கொண்டு ஒபாமா சிறப்பித்தார்.பின்னர் இந்தியா-அமெரிக்கா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.முக்கியமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள தடைக்கற்களை நீக்கி விரைந்து முடிக்கவும்,ஏற்றுமதி சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒபாமா தீவிரம் காட்டினார்.ஆனால் அணுசக்தி ஒப்பந்தத்தில் முடிவு எட்டப்படாததால் மிகுந்த அதிர்ச்சியும்,கோபமும் அடைந்தார் ஒபாமா.இதனால் இந்திய அரசாங்கத்திற்க்கு மறைமுகமாக நெருக்கடி கொடுக்கும் வேலைகளில் இறங்கியது அமெரிக்கா.

இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்:



அணுகுண்டு சோதனைகளும் அதன் விளைவுகளும்:


1974 ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி இந்தியா பொக்ரானில் முத்ல் அணுகுண்டு சோதனையை நடத்தியது.அன்று முதல் பல தடைகள் இந்தியாவின் மீது விதிக்கப்பட்டன.குறிப்பாக அணு உலைகள் கட்ட,அணு உலைகளுக்கு எரிபொருளான யுரேனியத்தைத் தர,அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பம் தர பல நாடுகள் மறுத்தன.1974ல் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவாக்கப்பட்டதுதான் Nuclear Suppliers Group.இந்த அமைப்பில் தற்போது 44 நாடுகள் உள்ளன.இந்தியாவுக்கு எந்த நாடும் யுரேனியத்தை தந்து விடக் கூடாது என்பதற்க்கு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அமைப்பு.ஏனென்றால் இந்தியா தனது அணு ஆராய்ச்சிக்கும்,மின்சார உற்பத்திக்கும் யுரேனியத்தையும்,தோரியத்தையும் முழுமையாக சார்ந்துள்ளது.தோரியம் இந்தியாவில் அளவுக்கு அதிகமாக கிடைத்தாலும்,தோரியத்தை சிறப்பாக உபயோகிக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை.எனவே நாம் முழுமையாக யுரேனியத்தைச் சார்ந்துள்ளோம்.இவ்வாறாக பல நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதை சுட்டிக்காட்டிய இந்திய விஞ்ஞானிகள் தமது பலத்தை உலகுக்கு காட்ட இரண்டாவது முறையாக அணுகுண்டுச் சோதனைக்கு தயாராயினர்.1996-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒருநாள் பிரதமர் நரசிம்மராவ் கண் அசைக்க அணுகுண்டு வெடிப்பு சோதனைகளுக்கு தேவையான வேலைகளில் தீவிரமாக இருந்தபோது,அமெரிக்க உளவு செயற்கைகோள் உதவியுடன் இதை அறிந்த அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தொலைபேசியில் நரசிம்மராவை தொடர்பு கொண்டு ஒருபிடி பிடித்தார்.பில் கிளின்டனின் நிர்பந்தத்தால் கடைசி நேரத்தில் அச்சோதனை கைவிடப்பட்டது.
இச்சோதனையை நிறுத்திய பின்னராவது இந்தியாவின் மீதான தடைகள் நீக்கப்படும் என்று எதிர்ப்பாத்தனர்.ஆனால் தடைகள் நீக்கப்படவில்லை.

பொறுத்ததுபோதுமென வாஜ்பாய் அனுமதி அளிக்க அப்துல் கலாம் தலைமையில் 1998-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி அமெரிக்க உளவு செயற்கைகோள்களின் கண்ணில் மண்ணைத் தூவி இரண்டாவது முறையாக அணுகுண்டுச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா.இந்த அணுகுண்டு,அணு ஆராய்ச்சியில் இந்தியாவின் பார்வையை மாற்றியது.30 ஆண்டு காலம் தடை போட்டு நாம் என்ன சாதித்தோம் என்று ஒவ்வொரு நாடுகளும் விவாதத்தில் இறங்கின குறிப்பாக அமெரிக்கா.

இந்தியாவுடன் நெருங்கி வந்த அமெரிக்கா:


இந்தியாவின் தனித்தன்மையும்,பொருளாதார வளர்ச்சியும் சற்றே அமெரிக்காவை யோசிக்க வைத்தது.மேலும் எதிர்கால உலகின் பாதுக்காப்பில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கம் காட்ட் ஆரம்பித்தது.இந்தியா-அமெரிக்கா கூட்டு இராணுவ பயிற்சி,விமான பயிற்சி என நெருங்கி வந்தது.அணு ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.இம்முடிவு எடுக்கப்பட்டவுடன்  இந்தியாவின் தொடர் முயற்சியின் காரணமாக இந்தியாவின் மீதான தடையை நீக்குவதாக அமெரிக்க அதிபர் புஷ் அறிவித்தார்.இந்திய-அமெரிக்க அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தின் படி இந்தியாவின் அணு ஆராய்ச்சி மையங்கள் சர்வதேச அணுசக்தி கழகத்தின்(IAEA-International Atomic Energy Agency) கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்.இதை இந்திய விஞ்ஞானிகள் கடுமையாக எதிர்த்தனர்.இதற்கு தீர்வாக இந்திய விஞ்ஞானிகள் இந்திய அணு ஆராய்ச்சி மையங்களை சிவிலியன்,மிலிட்டரி என இரண்டாக பிரித்தனர்.இதில் சிவிலியன் எனப்படும் மின் உற்பத்திக்கு பயன்படும் அணு மையங்களை IAEA  பார்வையிடலாம் என யோசனை கூறினர்.மிலிட்டரி என்பது அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களை தயாரிக்கும் அணு நிலையங்களிலிருந்து விலகி இருக்க வேண்டுமென கூறினர்.இதனை அமெரிக்காவும் ஏற்றது.இதன்பின்னர்தான் இந்திய-அமெரிக்க அணு ஆராய்ச்சி ஒப்பந்தம் இறுதிவடிவம் பெற்றது.


இந்தியாவுக்கு என்ன இலாபம்?


இந்த அணுசக்தி ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்கு ஒரே ஒரு இலாபம்தான்.நாம் வாங்கும் யுரேனியத்தை மின் உற்பத்திக்கு பயன்படுத்திவிட்டு அதை மறுசுழற்சியில் ப்ளூட்டோனியமாக்கி அணுகுண்டு தயாரிக்கலாம்.இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான அணுமின் நிலையங்கள் யுரேனியத்தை கொண்டு இயங்குபவையாகும்.யுரேனியம் நமக்கு தங்குதடையின்றி சர்வதேச நாடுகளிருந்து கிடைக்க வேண்டுமெனில் நாம் இந்த ஒப்பந்த்ததை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.யுரேனியம்,ப்ளூட்டோனியம் கிடைத்தால் மட்டுமே எதிர்கால தேவைக்கேற்ப மின்உற்பத்தி செய்ய முடியும்.தோரியம் அதிக அளவில் கிடைத்தாலும் அதை உபயோகிக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை.தோரியம் உபயோகபடுத்தும் தொழில்நுட்பத்தில் சிறப்பாகும் வரை யுரேனியம்,ப்ளூட்டோனியம் நமக்கு தேவை.அதற்கு அமெரிக்காவின் கடைக்கண் பார்வை இந்தியாவின் மீது விழ வேண்டும்.இதற்காக இந்த அணுசக்தி ஒப்பந்தம்.இந்த ஒப்பந்தத்தின் மூலம் நமது பிற்கால தேவைக்கும் யுரேனியத்தை சேமித்து கொள்ளலாம்.

அமெரிக்காவுக்கு என்ன இலாபம்?

எதிர்கால உலகின் பாதுகாப்பு,அமைதியில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்பதை அமெரிக்கா முதன்மைக் காரணாமாக கூறினாலும்,மிகப்பெரிய வணிக வியாபாரத்தை இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கணக்கு போட்டு வைத்துள்ளது.இன்றைய நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபிரிவிதமாக உள்ளது.அடுத்த 30-40 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் எங்கேயோ போய்விடும் என்று உலக நாடுகள் நம்புகின்றன.மிகப்பெரிய வர்த்தக சந்தை தான் இன்றைய நிலையில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு என்று அர்த்தம்.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து நிலைநிறுத்த அல்லது மேலும் அதிகரிக்க நாம் முதலில் அதிகரிக்க வேண்டியது மின்சார உற்பத்தி தான்.அதற்கு ஒரே தீர்வு அணு மின்சாரம் தான்.அதற்கான தொழில்நுட்பத்தை வழங்கபோவது மட்டும்தான் இந்த அணு ஆராய்ச்சி ஒப்பந்தம்.அதை வழங்க போவது அணுமின் தயாரிப்பில் அமெரிக்காவின் முன்னனி நிறுவனமான GE,WestingHouse.அவர்கள் இந்தியாவுக்கு வழங்கும் அணு தொழில்நுட்ப வர்த்தகம் தான் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய வர்த்தகங்களில் ஒன்றாகும்.கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.இதனால் தான் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் தீவிரம் காட்டுகிறது.ஆனால் இந்தியாவின் சில நிபந்தனைகளை ஏற்க மறுத்து வருகிறது.இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தாவது அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தை நிறைவேற்ற அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது.

Wednesday, December 17, 2014

புதினின் இந்திய வருகையும்,அமெரிக்காவின் எதிர்ப்பும்,பங்குச்சந்தையின் சரிவும்-ஓர் அலசல்

புதினின் இந்திய வருகை:

கடந்த டிசம்பர் 10-ந் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு இருநாள் பயணமாக வந்தார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் இருநாடுகளும் பாதுகாப்புத்துறை,பொருளாதாரம்,அணுசக்தி,இயற்கை எரிவாயு  ஆகியவற்றில் முக்கியமான 20 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய புதின் "வாஜ்பாய் காலத்தில் இருந்தே மோடியை எனக்கு தெரியும்.இந்தியாவுடனான உறவுகளுக்கு ரஷ்யா எப்போதும் முன்னுரிமை கொடுக்கும்.மேலும் இந்தியாவுடன் அறிவியல்,தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த ரஷ்யா விரும்புகிறது" என்று தெர்வித்தார்.மோடி பேசுகையில் "பல இக்கட்டான சூழ்நிலைகளில் ரஷ்யா இந்தியாவிற்க்கு உதவியுள்ளது.கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் சிறந்த நட்புநாடாக ரஷ்யா விளங்குகிறது.இந்தியா ரஷ்யா இடையே நட்புறவு சிறப்பாக இருக்கிறது.ரஷ்யாவுடனான வெளியுறவுக் கொள்கை எந்த சூழ்நிலையிலும் மாறாது" என்று தெரிவித்தார்.மேலும் ரஷ்யா அதிபர் புதினுடன் கிரிமீயா பிரதமர் செர்ஜி அக்ஸ்யோனோவும் இந்தியா வந்தார்.மேலும் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களிலும் கிரிமீய பிரதமர் கையெழுத்திட்டார்.

 

அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகளின் மறைமுக எதிர்ப்பும்:

 கிரிமீயாவை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்ததை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மிகக் கடுமையாக எதிர்த்ததுடன் ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகளையும் விதித்தனர்.மேலும் கிரிமீயா மற்றும் ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளை அனைத்து நாடுகளும் நிறுத்த வேண்டுமென அமெரிக்காவும்,ஐரோப்பிய யூனியனும் கேட்டுக் கொண்டன.இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் புதினுடன் கிரிமீய பிரதமரும் இந்தியா வந்தார்.கிரிமீயா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டது.இதன் மூலம் கிரிமீயா ரஷ்யாவுடன் இணைந்ததை இந்தியா அங்கீகரிப்பதாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கருதின.கிரிமீயாவுடனான வர்த்தக உறவிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மறைமுக நடவடிக்கைகளிலும் ஈடுபட ஆரம்பித்தன.மேலும் ரஷ்யாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவிற்க்கு பெரிய கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.ஏற்கனவே அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.அதாவது இந்தியாவின் அனைத்து அணுசக்தி நடவடிக்கைகளும் அமெரிக்காவின் கண்காணிப்பில் தான் நடக்கும் என்பதாகும்.இதன்மூலம் இந்தியாவின் அணுஆயுத நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பது அமெரிக்காவின் எண்ண்ம்.ஆனால் தற்போது ரஷ்யாவுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் கண்காணிப்பிற்க்கு கருப்பு புள்ளி வைத்துள்ளது.இதனால் அமெரிக்கா மிகக் கடுமையான ஆத்திரத்தில் இருக்கிறது.இருப்பினும் சீனாவை எதிர்க்க ஆசியாவில் இந்தியா தேவை என்பதால் வெளிக்காட்டி கொள்ளாமல் பொருமிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

பங்குச்சந்தையின் சரிவு:

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகமாக உள்ளது என்றும்,இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கி தெரிவித்தன.இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் மிக அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்தனர்.அதன் விளைவாக இந்தியப் பங்குச்சந்தை தன்னுடைய வரலாற்றில் மிக அதிகமாக 28,00 புள்ளிக்கும் அதிகமாகப் பெற்று உலகின் முதல் பத்து பெரிய பங்குச்சந்தை என்ற அந்தஸ்தைப் பெற்றது.ஆனால் புதினின் வருகைக்குப் பின்னர் நிலைமை தலைகீழானது.நாளுக்குநாள் இந்திய பங்குசந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது.இதற்கு காரணம்,கிரிமீயாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் தமது முதலீட்டாளர்களை இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மறைமுகமாக எச்சரிக்கப்பட்டனர்.அதனால் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளைத் திரும்ப பெற்றுக் கொண்டு வருகின்றனர்.ஆனால் இதற்கு முதலீட்டாளர்கள் தரப்பில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால் டாலர் முதலீட்டு பத்திரங்களில் முதலீடு செய்வதற்காக இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.ஆனால் அவர்கள் முதலீடுகளை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்புநாடுகளால் நிர்பந்தபடுத்தபட்டுள்ளனர்.இதிலிருந்து இந்தியா சர்வதேச விவகாரங்கலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் அல்லது தமக்கு ஆதரவாக செயல்பட வேண்டுமென அமெரிக்கா எண்ணுகிறது.இதிலிருந்து விலகும்பட்சத்தில் இந்தியா அரசியல் ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

இந்திய இதிலிருந்து விடுபட எவ்வகையான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, December 10, 2014

பெட்ரோல் விலைக் குறைப்பின் பின்னனி - ரஷ்யாவின் பதிலடி




பெட்ரோல் விலைக்குறைப்பினால் சற்றே நிலைகுழைந்த ரஷ்யாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முழுவீச்சில் களமிறங்கினார்.ரஷ்யாவின் பொருளாதாரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன்,அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தார்.

 ரஷ்யா-சீனா இயற்கை எரிவாயு ஒப்பந்தம்:

உக்ரைன் விவகாரத்தில் பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இயற்கை எரிவாயுவை வாங்குவதை வெகுவாகக் குறைத்துவிட்டன.இதன் காரணமாக ரஷ்ய பொருளாதாரத்தில் ஏற்ற,இறக்கம் இருந்ததே தவிர சரிவிற்க்கு செல்லவில்லை ஏனென்றால் அதன் அளப்பரிய இயற்கை எரிவாயுக்கள்.இதனால் அமெரிக்கா தனது அரேபிய அடிவருடிகளின் உதவியுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க செய்ததுடன்,விலைக்குறைப்பிலும் ஈடுபட்டனர்.இதன் நோக்கமே மற்ற நாடுகள் ரஷ்யாவிடம் இயற்கை எரிவாயு வாங்குவதை குறைப்பதாகும்.எவ்வாறெனில் உற்பத்தியை அதிகரித்து,விலையைக் குறைக்க செய்தால் மற்ற நாடுகள் அரேபிய நாடுகளின் எண்ணெயைத் தான் வாங்க விருப்பம் தெரிவிக்கும் அதுவுமில்லாமல் ரஷ்யாவில் இயற்கை எரிவாயுவை எடுக்க ஆகும் செலவு மிக அதிகம்.குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பதால் மற்ற நாடுகள் ரஷ்யாவின் இயற்கை எரிவாயு வாங்குவதை வெகுவாக குறைக்க ஆரம்பித்தன.உடனே சுதாரித்துக் கொண்ட ரஷ்யா சீனாவிடம் இயற்கை எரிவாயு ஒப்பந்தம் செய்துக் கொண்டது.அதன்படி ஆண்டிற்க்கு 30 பில்லியன் க.மீ அளவிலான இயற்கை எரிவாயுவை 30 ஆண்டுகளுக்கு சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான இயற்கை எரிவாயுவை சீனாவிற்கு உற்பத்தி செய்துக் கொடுப்பதாகும்.இதுதான் ரஷ்யாவின் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஒப்பந்தமாகும்.சீனாவுடனான ஒப்பந்தத்தின் மூலம் தனது இயற்கை எரிவாயுவின் விற்பனையை 30 ஆண்டுகளுக்கு உறுதிச் செய்துக் கொண்ட ரஷ்யா சரிந்துக் கொண்டிருந்த தனது பொருளாதாரத்தையும் நிலைநிறுத்தியது.

அமெரிக்காவிற்கு ரஷ்யாவின் பதிலடி:

தனது பொருளாதார பாதுகாப்பை கால் நூற்றாண்டுகளுக்கு உறுதி  செய்துக் கொண்ட ரஷ்யா அமெரிக்காவின் செயலுக்கு தக்க பதிலடி கொடுக்க முழுவீச்சில் இறங்கியது.பெட்ரோல் விலைக் குறைப்பினால் சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதை கண்டு ரஷ்ய அதிபர் புதின் கடும் எரிச்சலடைந்தார்.முதலீட்டார்கள் டாலரின் மதிப்பு குறையும்போது தங்கத்திலும்,தங்கத்தின் மதிப்பு குறையும்போது டாலரிலும் முதலீடு செய்வர்.மேலும் இவ்விரண்டில் ஏதாவது ஒன்று சர்வதேச சந்தையில் புழக்கத்தில் குறையும்போது அதன் மீது முதலீட்டாளர்கள் மிக அதிக அளவில் முதலீடு செய்வர்.தற்போது டாலரின் தேவை சந்தையில் மிக அதிக அளவில் உள்ளது ஏனென்றால் பெட்ரோல் விலைக்குறைப்பினால் அனைத்து நாடுகளும் கச்சா எண்ணெயை மிக அதிக அளவில் வாங்கி தங்கள் நாடுகளில் சேமித்து வருகின்றனர்.காரணம் பின்னாளில் எப்போது பெட்ரோல் விலை ஏறும் என்று தெரியாததால் விலை குறைவாக இருக்கும்போதே அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயை டாலரில் தான் வாங்க முடியும்.தற்போதைய பெட்ரோல் விலைக்குறைப்பினால் பெட்ரோல் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதால் டாலரின் மதிப்பும்,அதன் தேவையும் சர்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது.டாலரின் மதிப்பை குறைத்து,முதலீட்டாளர்களின் கவனத்தை தங்கத்தின் மீது திருப்ப புதின் மிக அதிக அளவில் சர்வதேச சந்தையிலிருந்து தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்தார்.ஏனென்றால் தங்கத்தின் புழக்கத்தைக் சர்வதேச சந்தையில் குறைத்தால் தங்கத்தின் தேவையும்,மதிப்பும் தானாகவே அதிகரித்து விடும்.அதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பும் என்பது புதினின் கணக்காகும்.புதினின் இந்த நடவடிக்கையால் அதன் தாக்கம் முதலில் அமெரிக்கா உணராவிட்டாலும் பின்னாளில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

அதோடு மட்டுமில்லாமல் சீனாவுடன் மேற்கொண்ட  இயற்கை எரிவாயு ஒப்பந்தத்தில் டாலரில் வாங்குவதை தவிர்த்துவிட்டு சீன நாட்டு கரன்சியிலே வாங்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.பொதுவாக உலகில் டாலர் ரிசர்வ் கரன்சியாக பயன்படுத்தி வருகின்றனர்.சர்வதேச சந்தையில் வாங்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு டாலரில் தான் பணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.இதனால்தான் பெரும்பாலான நாடுகள் மற்ற நாடுகளுடன் தாங்கள் செய்யும் ஒப்பந்தங்களின் பலனாக டாலரைப் பெற்றுக் கொள்ளும்.ஆனால் புதின் இதை தகர்த்தெறிய வேண்டுமென்பதற்காகவே சீன நாட்டு கரன்சியில் இயற்கை எரிவாயு ஒப்பந்ததை மேற்கொண்டார்.புதினின் இந்த செயலால் அமெரிக்காவிற்க்கு ஆண்டுக்கு 100 கோடி டாலர் என்று 30 ஆண்டுகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் படிபடியாகக் குறைந்துவரும் பெட்ரோல் விலைக்கும்,மெதுவாக தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்வதற்கும் இந்த ரஷ்ய-அமெரிக்க மோதல்தான் காரணம்.

Thursday, November 27, 2014

பெட்ரோல் விலைக் குறைப்பின் பின்னனி - அமெரிக்காவின் சூழ்ச்சி

 சமீபத்தில் பெட்ரோல் விலை சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு 1 பேரலுக்கு 80 டாலர் என்ற அளவில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சவூதி அரேபிய மன்னரின் சந்திப்பிற்க்கு பின்னர் இந்த விலைக்குறைப்பு உறுதி செய்யப்பட்டது.இதன் பின்னனியில் பல மர்மங்கள் உள்ளன.உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீட்டை எதிர்க்கவும்,அணு ஆயுத நாடாக உருவாக முயலும் ஈரானை எதிர்க்கவும் இந்த அதிரடி விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவை எதிர்க்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன்:


உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்காவும்,ஐரோப்பிய யூனியனும் எடுத்து வருகின்றன.புதின் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு விசா தடை,ரஷ்யாவின் பெரும் தொழிலதிபர்களின் வங்கிக்கணக்கு முடக்கம்,ரஷ்யத் தயாரிப்புகளுக்கு தடை என பல தடைகளை விதித்துள்ளது.மேலும் உக்ரைனில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் புரட்சியாளர்களுக்கு ஆயுதம் மற்றும் பண உதவி அளிப்பதாக ரஷ்யாவைக் குற்றம் சாட்டுகின்றன.மேலும் உக்ரைனின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வராததால் உக்ரைனின் உதவியுடன் ரஷ்யாவின் எல்லையோரங்களில் அமெரிக்கா மற்றும் நோட்டோ படைகள் பீரங்கிகளையும்,இராணுவத்தையும் குவித்து வருகிறது.அத்தோடில்லாமல் ரஷ்யாவின் எல்லையோர நாடுகளான எஸ்டோனியா,லத்திவாவிலும் இராணுவத்தை குவித்து வருகின்றன.உக்ரைன் விவகாரத்திற்க்கு முன்புவரை அமெரிக்காவால் ரஷ்யாவின் அருகில் நெருங்க முடியாமல் இருந்தது.தற்போது அமெரிக்கா இராணுவ ரீதியாக ரஷ்யாவை நெருங்கிவிட்டதால் அடுத்ததாக ரஷ்யாவின் பொருளாதாரத்தை அடியோடு ஒடுக்க ஆர்வம் காட்டி வருகிறது.

ரஷ்யாவின் பொருளாதார பலமே அதன் இயற்கை வளங்களான பெட்ரோலும்,இயற்கை எரிவாயும்தான்.ரஷ்யாவின் பெட்ரோலுக்கும்,இயற்கை எரிவாயுக்கும் முற்றிலும் தடை விதிக்க முடியாது.ஏனென்றால் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவின் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பித்தான் உள்ளன.அதையும் மீறி தடைவிதித்தால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.விலைக்குறைப்பிற்க்கு  நிர்ப்பந்தப்படுத்துவதின் மூலம் ஓரளவிற்க்கு ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கட்டுபடுத்தலாம்.அதன் ஒரு பகுதியாகத்தான் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சவூதி அரேபிய மன்னரின் சந்திப்பில் இந்த விலைக்குறைப்பிற்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.OPEC உறுப்பு நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த விலைக்குறைப்பு செய்யப்பட்டது.தற்போது 1 பேரல் கச்சா எண்ணெய் 80 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.ரஷ்யாவில் பெட்ரோலை எடுப்பதற்க்கு ஆகும் செலவு மிக அதிகம்.பெட்ரோல் விலை 100 டாலருக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே ரஷ்யாவால் ஒரளவிற்கு இலாபம் பார்க்க முடியும்.மேலும் ரஷ்யா தனது பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க 2014ல் 98 டாலருக்கும்,2015ல் 105 டாலருக்கும் பெட்ரோலை விற்றால் மட்டுமே சமாளிக்க முடியும்.பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க ரஷ்யா தனது பட்ஜெட்டில் மானியங்கள் மற்றும் நிதிச்சுமையை குறைக்க முயலும்.ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகளால் ரஷ்ய பொருளாதாரம் சரிந்துக் கொண்டே செல்கிறது மேலும் டாலருக்கு எதிரான அந்நாட்டின் நாணய மதிப்பு 30% வரை சரிந்துள்ளது.இதனால் ரஷ்யா தனது மானியங்களை குறைக்கும்பட்சத்தில் அது அந்நாட்டு மக்களை அரசுக்கு எதிராக போராடத் தூண்டும்.இதனால் ரஷ்யா உள்நாட்டு விவகாரங்களில் கவனத்தை செலுத்தும் இதன் விளைவாக தனி ஆளாக சர்வதேச விவகாரங்களில் கவனத்தை செலுத்தலாம் என்பது அமெரிக்காவின் கணக்கு.

ஈரானை எதிர்க்கும் அமெரிக்கா :


அரபு தேசத்தில் இருக்கும் ஈரானுக்கு வல்லரசு ஆசை வந்துவிட்டது.அணு ஆயுதங்களைத் தயாரிப்பதன் மூலம் தானும் இராணுவ வல்லரசாகிவிடலாம் என்று ஈரான் நினைக்கிறது.ஈரானின் பொருளாதாரம் பலமாக இருப்பதால் தனது இராணுவத்தை பலப்படுத்திவிட்டால் அரபுதேசத்தில் வலிமை வாய்ந்த நாடாக மாறிவிடலாம் என்று எண்ணுகிறது.ஒருவேளை பின்னாளில் ஈரான் அணுஆயுத வல்லரசு ஆகிவிட்டால் அரபு தேசத்தில் ஆதிக்கம் செலுத்த ஈரான் எதிர்க்கும் என அமெரிக்கா அஞ்சுகிறது.இதனால் ஈரானுக்கு சில குறிப்பிட்ட பொருளாதார தடை விதித்ததுடன் அணு ஆயுதங்களை தயாரிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும்.மேலும் ஈரானின் பொருளாதாரத்தை ஆட்டிப்பார்க்கவே இந்த பெட்ரோல் விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறாக தன்னுடைய ஒரு நகர்த்தலின் மூலம் இரு நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டிப் பார்க்கிறது அமெரிக்கா.


                                 ரஷ்யாவின் பதிலடிக்கு கிளிக் செய்யவும் 

Wednesday, November 19, 2014

இந்திய பாதுகாப்புக்கு எச்சரிக்கையா?-பூதாகராமாக வெடிக்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம்

கடந்த மாதம் இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தில் சீனா தனது அணு ஆயுதங்களை தாங்கும் நீர்மூழ்கிக் கப்பலை இரண்டுமுறை நிலைநிறுத்தியது.இது இந்திய பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனாவால் நேரடியாக விடப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.ஆனால் இலங்கையோ இது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பு ரீதியிலான பயணம் என்றே கூறி வருகிறது.மேலும் ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் எரிபொருள் நிரப்பவே அது கொழும்பில் முகாமிட்டது என்றும் இது இந்தியாவுக்கு விடப்பட்ட எச்சரிக்கையல்ல என்றும் மறுத்து வருகிறது.இந்தியா தனது பாதுகாப்பை உறுதி செய்யுமானால் இலங்கையின் இத்தகைய செயல்களை தடுக்க வேண்டும்.

சீனாவின் முத்துமாலைத் திட்டம்:

வட,தென் அமெரிக்க கண்டத்தில் அமெரிக்கா,ஆசிய-ஐரோப்பாவில் ரஷ்யா  வலிமை வாய்ந்த வல்லரசாக திகழ்வதுபோல,ஆசிய பிராந்தியத்தில் சீனா தன்னை ஒற்றை வல்லரசாக்க முயன்று வருகிறது.ஆனால் இப்பிராந்தியத்தில் இந்தியாவும் உலக வல்லரசாக வேகமாக வளர்ந்து வருகிறது.இது சீனாவிற்க்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.ஏனென்றால் ஆசிய பிராந்தியத்தில் ஒற்றை வல்லரசாக இருந்தால் மட்டுமே தான் நினைத்ததை இப்பிராந்தியத்தில் நிறைவேற்ற முடியும் இதற்கு போட்டியாக இன்னொரு நாடு இருக்குமானால் அந்நாடு தனக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்குமென எண்ணுகிறது.இதனால் இந்தியாவை பொருளாதார ரீதியாகவும்,இராணுவ ரீதியாகவும் மறைமுகமாக சுற்றி வளைக்க ஆரம்பித்துள்ளது.இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்பகுதியைச் சுற்றி வளைப்பதின் மூலம் இந்தியாவின் கடல்வழி வணிகத்தையும்,கடல்சார்ந்த பாதுகாப்பையும் ஓரளவிற்கு கட்டுபடுத்தலாம் என சீனா எண்ணுகிறது.இதற்காக மிக இரகசியமாக முத்துமாலைத் திட்டம்(String of Pearls) என்ற திட்டத்தை இந்தியாவிற்க்கு எதிராக செயல்படுத்தி வருகிறது.அதாவது இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் சீனா தனது இருப்பை உறுதி செய்து கொள்வது,அதற்காக பாகிஸ்தானில் உள்ள கவ்தார்,இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா,பங்களாதேஷில் சிட்டகாங்க்,மியான்மாரில் உள்ள சித்வே மற்றும் கோகோ தீவுகள்  ஆகியவற்றில் முதலீடு செய்வதும்,அங்குள்ள துறைமுகங்களை சீரமைப்பதுடன் அவற்றை தனது இராணுவ தளங்களாகவும் உறுதி செய்து கொண்டுள்ளது.

முத்துமாலைத் திட்டத்தில் இலங்கையின் முக்கியத்துவம்:

முத்துமாலைத் திட்டத்தில் இலங்கையின் ஹம்பந்தொட்டா மிகப்பெரிய முக்கியத்துவம் பெறுகிறது.ஏனென்றால் சீனா ஹம்பந்தொட்டாவில் உள்ள தனது இராணுவ தளத்திலிருந்தே இந்திய பெருங்கடல் முழுவதையும் கண்காணிக்க முடியும்.மேலும் ஹம்பந்தொட்டாவிலிருந்து ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளை எளிதாகக் கண்காணிக்க முடியும்.இதனால் சீனா இலங்கைக்கு அதிக அளவில் கடன்களை முதலீடுகளாக வழங்கியுள்ளது.இந்தியாவுடன் சேர்ந்துவிடுவோம் என்று சொல்லியே சீனாவிடமிருந்து அதிக அளவில் நிதியை வாங்கிக் குவித்துள்ளது.சீனாவிடம் சேர்ந்துவிடுவோம் என்று சொல்லியேஇந்தியாவிடம் அதிக அளவில் நிதியை வாங்கிக் குவித்துள்ளது.இந்தியாவுக்கு இலங்கை நட்புநாடு என்ற ரீதியில் மட்டுமே நிதி அளித்து வருகிறது.வேறு எந்த தேவையும் இந்தியாவுக்கு இலங்கையில் இல்லை.ஆனால் சீனாவிற்க்கு அப்படி இல்லை ஏனென்றால் தனது தடையில்லா எண்ணெய் வணிகத்திற்க்கும்,ஆசியாவைத் தாண்டிய தனது உலகளாவிய அரசியல் பார்வைக்கும்,தனது முத்துமாலைத்திட்டத்தில் ஹம்பந்தொட்டா முக்கிய இடம்வகிப்பதால் இலங்கையின் முக்கியத்துவம் சீனாவிற்கு தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.மேலும் சீனா இலங்கையின் சாலை,இரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது.இதன் ஒருபகுதியாக ஹம்பந்தொட்டா துறைமுகத்தை பராமரிக்கும் முழுபொறுப்பையும் சீனா எடுத்துள்ளது.இதுதான் இந்தியாவிற்கு மிகப்பெரிய எரிச்சலைத் தந்துள்ளது ஏனென்றால் இலங்கையின் ஹம்பந்தொட்டாவில் இருந்தபடியே இந்தியாவின் கடற்படை செயல்பாடுகளை எளிதாக சீனாவால் தொடர்ச்சியாக கண்காணிக்க முடியும் என்பதால்.

தீர்வுதான் என்ன?

இந்தியா இலங்கையை முழுவதுமாக தனது நட்புநாடாக மாற்ற வேண்டும் அல்லது சீனாவின் இத்தகைய செயல்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.சீனாவின் முதலீடுகள் அதிக அளவில் இலங்கையில் உள்ளதால் பெயரளவில் மட்டுமே இந்தியாவின் நட்புநாடாக இருக்க இலங்கை விரும்புகிறது.ஏனென்றால் முழு நட்புநாடாக மாறினால் சீனாவின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டுமென்பதால் இலங்கை இதை விரும்பாது.இதனால் சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் விவகாரங்களில் இந்தியா இறங்கியுள்ளது.சீனா இலங்கையில் நீர்மூழ்கி நிறுத்திய விவகாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வியட்நாம் பிரதமருடன் இந்திய கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தியது.பேச்சுவார்த்தையின் முடிவில் வியட்நாம் கடல் எல்லைக்குள் இந்திய நீர்மூழ்கி கப்பல்கள் சுதந்திரமாக வரலாம் என்பதாகும்.அதாவது தென்சீனக் கடலில் வியட்நாமின் எல்லைக்குள் இந்திய நீர்மூழ்கி கப்பல்கள் சுதந்திரமாக திரியலாம்.சீன பிரதமர் இந்தியாவில் இருக்கும்போதே இந்தியாவின் எல்லையில் அத்துமீறி நுழைந்தவர்கள் இதை கேள்விப்பட்டு சும்மா இருப்பார்களா என்ன.இலங்கையை தூண்டிவிட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கு எதிராக போலி ஆவணங்களை தயாரித்து அவர்களுக்கு தூக்குத்தண்டனையை நீதிமன்றம் மூலம் உறுதி செய்துள்ளது.இச்செயல்களுக்கு முழு பின்புலமாக இருந்து செயல்பட்டது சீனாதான்.தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மிகக்கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே பின்னாளில் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கலாம்.மேலும் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்பை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன்,தனது கண்காணிப்பையும் இப்பிராந்தியத்தில் அதிகரிக்கச் செய்தால் மட்டுமே சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க முடியும்.

Saturday, November 8, 2014

அமெரிக்காவின் ஆயுத தளவாடங்கள் விற்பனை தந்திரம் - பாகம் 2

 

இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினை:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஜம்மு&காஷ்மீர் பிரச்சினையை இவ்வுலகமே அறிந்தது.இந்தியா பாகிஸ்தான் பிரிவினைவாதத்தின் போதே ஐ.நா சபையின் மூலம் ஜம்மு&காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்று முடிவு செய்திருந்தால் அன்றோடு இந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும் ஆனால் அப்போதைய நேரு அரசு தீர்ப்பு நமக்கு பாதகமாக வந்துவிட்டால் என்ற அச்சத்திலேயே அம்முடிவை கைவிட்டது.அன்றிலிருந்து ஜம்மு&காஷ்மீர் தமக்குதான் சொந்தம் என்று பாகிஸ்தான் இன்றுவரை இந்தியாவுடன் பிரச்சினை செய்து வருகிறது.இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான்,மேற்கு பாகிஸ்தான் என்று இரண்டு தனிததனி இடங்களில் இருந்தது..தற்போதைய பங்களாதேஷ் தான் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது.முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கிழக்கு பாகிஸ்தானை தனிநாடாக்க மிகப்பெரிய அளவில் உதவி செய்தார்.இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியையும்,ஆத்திரத்தையும் உண்டாக்கியது.ஜம்மு&காஷ்மீர் விவகாரமும்,பங்களாதேஷ் உருவாக்கமும் பாகிஸ்தான் இந்தியாவுடன் நேரடியாக மோத வித்திட்டது.இருநாடுகளும் அவ்வப்போது எல்லையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சண்டைப் போட்டுக் கொண்டனர்.இருமுறை இருநாடுகளுக்கிடையில் போர் மூண்டுள்ளது.இதனால் இருநாடுகளும் தனது பாதுகாப்புத் துறையைப் பலபபடுத்த ஆயுதங்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தன.
இந்த சூழ்நிலையை  அமெரிக்க ஆயுத வியாபாரிகள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர்.தொடர்ச்சியாக இந்தியா வாங்கிக் குவிக்கும் ஆயுதங்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை கணக்கில் காட்டி பாகிஸ்தானிடம் வியாபாரம் செய்கிறது.பாகிஸ்தான் வாங்கிக் குவிக்கும் ஆயுதங்களின் தரம் மற்றும் எண்ணிக்கையைக் காட்டி இந்தியாவிடம் வியாபாரம் செய்கின்றனர்.இந்த வியாபார சூட்சமத்தை இன்றுவரை அவர்கள் கையாண்டு வருகின்றனர்.அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களுக்கு மறைமுகமாக பண உதவி செய்து வருகின்றனர்.மேலும் அமெரிக்காவின் உளவு அமைப்புகள் இவர்களுக்கு இரகசியமாக பயிற்சி அளிக்கின்றனர்.இவர்களால் உருவாக்கப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர்தான் ஒசாமா பின்லேடன்.இத்தீவிரவாத இயக்கங்கள் அடிக்கடி பாகிஸ்தானிலும்,இந்தியாவிலும் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.ஜம்மு&காஷ்மீரில் இவர்கள் நடத்தும் தாக்குதலுக்கு அளவே இல்லை.இவ்வாறாக உள்நாட்டிலும் தாக்குதல் நடப்பதால் இரு நாடுகளும் மேலும் தமது பாதுகாப்பைப் பலப்படுத்த மேலும் ஆயுதங்களை அவர்களிடம் வாங்குகின்றனர்.

இந்தியா - சீனா பிரச்சினை:

அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவை அடுத்த தலைமுறை வல்லரசு என கூறி வருகின்றனர்.ஏற்கனவே வல்லரசு கனவில் மிதக்கும் சீனாவிற்க்கு இது மிகப்பெரிய எரிச்சலை உண்டாக்கியது.தற்போதைய தலைமுறையில் உலக வல்லரசு என்பது அந்நாட்டின் பொருளாதார பலம்,இராணுவ பலத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. எப்போது இந்தியாவும் சீனாவும் பொருளாதார வல்லரசாக உருவாக ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே சீனா இந்தியாவுடன் மோதல்போக்கை கடைபிடிக்க ஆரம்பித்தது.இந்திய எல்லைக்குள் அடிக்கடி சீன இராணுவ வீரர்கள் ஊடுருவி தொடர்ச்சியாக இந்தியாவை சீண்டி வருகின்றனர்.எங்கே இந்தியா தனக்கு போட்டியாக வந்துவிடும் என்ற அச்சத்திலேயே இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுடன் சீனா தனது நட்புறவையும் அதன் தொடர்ச்சியாக தனது இராணுவ தளங்களையும் அமைத்து வருகிறது.இதற்காக தான் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாக கூறிக்கொண்டு சீனா தனது நாட்டின் நிறுவனங்களின் மூலம் அந்நாடுகளில் மூதலீடு செய்து வருகிறது.இதன் பலனாக அந்நாட்டின் இராணுவ மையங்களை சீனா தனது இராணுவ மையமாகப் பயன்படுத்தி வருகிறது.போர் மூளும் சமயத்தில் சீனா,பாகிஸ்தான்,இலங்கை என மூன்று நாடுகளிருந்து மும்முனைத் தாக்குதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.இந்தியா என்னதான் சீனாவை சுற்றியுள்ள நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டாலும் போர் மூளும் காலங்களில் சீனாவை சுற்றியுள்ள தனது நட்புநாடுகளில் போர்தளங்கள் இல்லாவிடில் இந்தியா சீனாவை இந்தியாவிலிருந்தே சமாளிக்க வேண்டும்.

இத்தகைய மறைமுக போரில் இந்தியாவுக்கு அமெரிக்கா உதவுவதாக கூறிக்கொண்டு அமெரிக்க படைவீரர்கள் இந்திய படைவீரர்களுடன் இணைந்துக் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் இந்திய ராணுவத்தை பலப்படுத்துவதாகக் கூறி மிகஅதிக அளவில் தங்கள் நாட்டு ஆயுதங்களை இந்தியாவுக்கு தொடர்ச்சியாக இறக்குமதி செய்து இலாபம் பார்த்து வருகின்றனர்.இன்றளவும் பல ஆண்டுகளாக அமெரிக்காவிடம் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது.அமெரிக்கா இந்தியாவுடன் கூட்டுபயிற்சியில் ஈடுபட ஆரம்பித்திலிருந்து சீனா தனது இராணுவத்தை மிகப்பெரிய பலப்படுத்த ஆரம்பித்தது.மேலும் சீனா அமெரிக்கா மற்றும் பிறநாடுகளிடமிருந்து கணிசமான அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது.பொருளாதாரத்தை தவிர பல விவகாரங்களில் இந்தியா உலகில் இன்று பின்தங்கியுள்ளது.இருப்பினும் இந்தியாதான் சீனாவுக்கு சரியான போட்டி என்ற கூற்றை அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.இதை அமெரிக்க முன்னனி பத்திரிக்கை நிறுவனங்கள் அடிக்கடி கருத்துக்கணிப்பு என்ற பெயரில் புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகின்றன.இதனால் இந்தியாவை தனது போட்டியாளராக கருதி ஆத்திரமடையும் சீனா தனது ஆத்திரத்தை வெளிப்படுத்த இலங்கையைத் தூண்டிவிட்டு தமிழக மீனவர்களை கைதுசெய்வதும்,பாகிஸ்தானை தூண்டிவிட்டு இந்திய எல்லையில் தாக்குதல் நடத்துவதும்,அதே நேரத்தில் இந்திய எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் தனது இராணுவத்தை அத்துமீற செய்வது என மறைமுகமாக தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.இதனை சமாளிக்க இந்தியா தனது இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்ததே தவிர தனது ஆயுத பலத்தை அதிகரிக்க முடியவில்லை.ஏனென்றால் இந்தியாவிடம் அத்தகைய நவீன ஆயுதங்களை தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் இல்லை.இதனால் இந்தியா ஆயுத தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் நாடுகளிடம் ஆயுதங்கள் இறக்குமதி செய்ய ஆரம்பித்தது.இவற்றில் அமெரிக்கா தான் இந்தியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதில் முதலிடம் வகிக்கிறது.இந்தியா எவ்வளவோ வற்புறுத்தியும் அமெரிக்கா அத்தொழில்நுட்பங்களை வழங்க மறுத்து வருகிறது.ஒருவேளை இந்தியாவிடம் கொடுத்தால் அவர்கள் தங்களிடம் இறக்குமதி செய்யும் ஆயுதங்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிடும் என அமெரிக்கா அஞ்சுகிறது.இவ்வாறாக சீனாவை இந்தியாவின் எதிரியாகக் காட்டியே ஆயுத வியாபாரம் செய்து வருகிறது.இந்த வியாபார சூட்சமத்தை இன்றுவரை அமெரிக்கா கையாண்டு வருகிறது.

பாகிஸ்தானைக் காட்டி இந்தியாவிடம் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா,சீனாவையும் இந்தியாவின் போட்டியாளராகவே காட்டி இந்தியாவிடம் ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.இன்றுவரை உலகில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக முதலிடம் வகித்து வருகிறது.அமெரிக்காவிடம் தொடர்ந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் பல வருடங்களாய் முதலிடம் வகித்து வருகிறது.